Monday, December 15, 2008

சாக்கடையில் மனிதர்கள்..!

நான் தங்கியிருக்கும் அறை சென்னை,வால்டாக்ஸ் ரோட்டில் உள்ளது. எனது அறைக்கு சற்று முன் ரோட்டில் இரண்டு நாட்களாக பாதாளசாக்கடையிலிருந்து கசிவு ஏற்பட்டு ஒரே துர்நாற்றம். இன்று காலை அறையின் வாசல் அருகே மோட்டார் சத்தம் கேட்க, வெளியே வந்து பார்த்தேன். இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் ஒரு சிறிய மோட்டாரை வைத்துக்கொண்டு பாதாளசாக்கடையிலிருந்து கழிவுகளை இறைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் மோட்டாரை அணைத்துவிட்டு தனது சட்டை,கைலியை அவிழ்த்துவிட்டு உடம்பில் ஏதோ எண்ணெய் தேய்த்தார். வெறும் ஜட்டியுடன் சாக்கடையினுள் இற‌ங்கினார்.நீரினுள் முங்கி தனது கையினால் உள்ளிருக்கும் ஓட்டையினுள் அடைத்துக் கொண்டிருந்த‌ குப்பையை சிறிது நேர போராட்டத்திற்கு பின் அகற்றி வெளியே போட்டார். சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். அவரது உச்சி தலைமுடியிலிருந்து கால் பாதம்வரை கழிவுநீரின் அழுக்குகள்(அதில் என்னன்ன கழிவுகள் கலந்திருக்கும்..)ஒட்டியிருந்தன. அவர் அதை சாதாரணமாக ஒரு துண்டை எடுத்து துடைத்துவிட்டு கைலி,சட்டையை போட்டுக்கொண்டார். சாக்கடையை மூடிவிட்டு மோட்டாரை மூன்றுசக்கர சைக்கிளில் தூக்கிவைத்துக்கொண்டு சைக்கிளை மிதிக்க தொடங்க மற்றொருவர் சைக்கிளை தள்ளிகொண்டே நடக்க ஆரம்பித்தார். நாகரிக உலகில் எத்தனையோ கருவிகள் வந்தாலும் பாதாள சாக்கடையில் மனிதன் இறங்கதான் செய்கிறான். நீச்சல் வீரர்கள் அணிவதுபோல உடம்போடு ஒட்டிய உடையோ., வெடிகுண்டு நிபுணர்கள்,தீயணைப்புவீரர்கள் அணிவதுபோல பாதுகாப்பான கவச உடையோ., இவர்களுக்கென தனியாக கண்டுபிடிக்கபடவில்லையா?.. அல்லது இவர்களுக்குத்தான் தெரியவில்லையா? அதில் இறங்காதவரை அந்த கஷ்டங்களை இவர்களை வேலைவாங்கும் அதிகாரிகள்தான் புரிந்துகொள்ளப்போகிறார்களா.?

5 comments:

Thangavel Manickam said...

மனித வாழ்வின் அவலங்களில் இந்த நிகழ்ச்சியும் ஒன்று. இதற்கான மாற்று ஏற்பாடு செய்யக்கூடியவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் என்றும் அவர்கள் இதனைப் பற்றிக் கவலைப்பட்டது இல்லை. கவலைப்படப்போவதுமில்லை. சாக்கடை துப்புரவு பணியாளர் சங்கம் ஒட்டுமொத்தமாக ஓட்டினைப் புறக்கணிக்கிறோம் என்று சொன்னால் கூட, என்னைத் தேர்ந்தெடுங்கள், உங்கள் தேவைகளை நிறைவேற்றி வைக்கிறேன் என்று சொல்லி ஓட்டினை வாங்கி விடுவர். ஆனால் என்றும் இதற்கொரு விடிவுகாலம் வரப்போவதுமில்லை.

சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படி வந்தால் ஏதேனும் நடக்க வாய்ப்புண்டு.

பட்டாம்பூச்சி said...

மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. இவர்களுக்காக உங்களைபோல் எத்தனை பேர் குரல் கொடுத்தாலும் அரசின் காதுகளுக்கு இது விழாது. அருகில் இருக்கும்,தினமும் பார்க்கும் சக மனிதர்களின் துன்பங்களை உணர முடியாத மனிதாபிமானமில்லாத அரசியல்வாதிகளை என்ன சொல்லி குறை சொல்வது?

ராம்.CM said...

நன்றி!தங்கவேல் மாணிக்கம்!. நன்றி!chuttiarun!.நன்றி!pattaampoochi!.தங்கள் அனைவரின் வருகையால் மகிழ்ச்சி!..

ச.பிரேம்குமார் said...

சீக்கிரமே இதுக்கெல்லாம் கருவிகளை பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்

ராம்.CM said...

நன்றி பிரேம்.!