Monday, June 22, 2009

திண்டுக்கல் டூ விருதுநகர்

"காலை எட்டு மணி ஐம்பது நிமிடத்திற்கு இங்கு வந்து சேரவேண்டிய வண்டி எண் இரண்டு ஆறு மூன்று இரண்டு சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் வழியாக திருநெல்வேலி வந்து சேரும் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நாற்பது நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருந்துகிறோம்" திருநெல்வேலி இரயில் நிலைய ஒலிபெருக்கி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒலித்து கொண்டிருந்தது.

நேரம் 09.40 : இரயில்வே காவல்துறை அலுவலகம். இன்ஸ்பெக்டர் அறை.

மெருகேறிய உடற்கட்டு, முறுக்கிய மீசை, பிடிப்பான யூனிபார்ம் என பார்க்க கம்பீரமாக தோன்றும் இன்ஸ்பெக்டர் ராம் தன்னை அழைத்த செல்போனை காதுக்கு கொடுத்தார். மறுமுனையில் அவரது மனைவி.

'என்னம்மா? என்ன விஷயம்?.'

'ஒன்றுமில்லை. இன்னிக்காவது மதியம் சாப்பாட்டுக்கு சீக்கிரம் வாங்க.'

'சரிம்மா.'

'சரிம்மான்னுட்டு லேட்டா வராதீங்க. கல்யாணநாள் அதுமா என்னை டென்சன் ஆக்கிடாதீங்க.!'

'சரி' என்று போனை வைக்கவும் எஸ்.ஐ அறையின் உள்ளே வந்து சல்யூட் அடிக்கவும் சரியாக இருந்தது.

'எஸ் சதீஸ்! எனித்திங் ஸ்பெஷல்?'

'எஸ் சார்!.'

'என்னாச்சு?'

'சார். நெல்லை இப்பதான் ப்ளாட்பார்ம் 1ல் வந்தது. எல்லோரும் இறங்கி போயாச்சு. ஆனால் எஸ் 9ல் ஒருவர் மட்டும் எழுந்திருக்கவில்லை என அவருடன் பயணம் செய்த அவரது நண்பர் கூற இரயில்வே டாக்டரை வர சொல்லி பரிசோதனை செய்ததில் அவர் இறந்திருந்தார். உடனடியாக ஜி.ஹெச்.க்கு சொல்லி ஆம்புலன்ஸ் வரசொல்லியிருக்கிறேன்.'

'அப்படியா! வாங்க.போய் பார்க்கலாம்.'

ப்ளாட்பாரம் 1, எஸ் 9 பெட்டி ஜன்னல் வழியே எட்டி பார்ப்பவர்களை ஒரு கான்ஸ்டபிள் விரட்டி கொண்டிருந்தார். பெட்டியின் உள்ளே சென்ற ராம், தூங்குவது போல் படுக்கை நிலையில் இறந்துகிடந்த அந்த 45 வயது மதிக்கதக்க அந்நபரை பார்த்துவிட்டு அருகில் நிற்பவரிடம் திரும்பினார்.

'நீங்க யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?'

'எங்களுக்கு சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள குளித்தலை சார். நாங்க இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் அண்டு பிஸினஸ்மேன் சார். இரண்டு பேரும் பாட்னர்சிப்பில் திருச்சியில் ஒரு பேப்பர் மில் நடத்துகிறோம். இப்போது திருநெல்வேலியில் கொண்டாநகரம் அருகே புதுமில்லுக்காக இடம் பார்க்க வந்தோம். நல்லா தூங்கிட்டோம் சார். இப்பதான் நான் எழுந்திருச்சேன். அவரை எழுப்பினேன். அவர் எழுந்திருக்கவில்லை சார்.'

'அப்படியா! நீங்க டிரிங்க்ஸ் பண்ணியிருக்கீங்களா?'

'அவரும், நானும் சேர்ந்துதான் சாப்பிட்டோம் சார்.' என்றார்.

அதற்குள் ஆம்புலன்ஸ் வர 'சதீஸ்! பெட்டியை நன்றாக சோதனையிட்டு பின்பு பாடியை போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பிவிட்டு ரிப்போட்டுடன் ஸ்டேசன் வாங்க. நான் இவரை அழைச்சிட்டு போறேன்.'

'எஸ்.சார்.'

மூன்றுமணிநேரத்திற்கு பிறகு :

இன்ஸ்பெக்டர் அறையில் ராம் அவருக்கு நேரெதிரே சதீஸ்.

'என்ன சதீஸ்! போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?.'

'குடிபோதையில் இருந்த இவர் மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்து நான்கு மணிநேரம் ஆகியிருக்கலாம். இவரது நண்பர் கூறியது போல குடிபோதையில் மாரடைப்பால் இறக்கவில்லை.'

'ஓ.கே. இவரது நண்பரை மேலும் தீவிரமாக விசாரிங்க. ரிப்போர்ட் படி பார்த்தால் கொலை மதுரைக்கு முன் நடந்திருக்கலாம். அப்படிதானே.'

'ஆமா சார்.'

'சரி நீங்க இவரை பார்த்துக்குங்க. நான் "சீப் ரிசர்வேஷன் சூப்பர்வைசரை" பார்த்துவிட்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு தனது செல்போனை எடுத்து தனது மனைவிக்கு டயல் செய்தான். மறுமுனையில்..

'என்னங்க! கிளம்பிச்சா?'

'ஸாரிம்மா! ஒரு மர்டர் கேஸ். வரமுடியாது.'

'ஒருநாளாவது சொன்னமாதிரி செய்ததுண்டா?'

'சரி கோபப்படாதே! நான் அப்புறம் கால் பண்றேன்.' என்று கூறி போனை வைத்தான்.

மீண்டும் சதீஸ்சும், ராமும் :

'என்னாச்சு! சதீஸ் எனித்திங் க்ளு!'

'நத்திங் சார். அந்த நபரை விசாரித்ததில் அவர் பதட்டபட்டு உளறுகிறாரே தவிர அவர் கொலையாளி இல்லை என தோன்றுகிறது சார்!'

'அப்படியா! சரி. என் ப்ளான்படி மொத்த பயணிகளில் இவர்களுடன் திருச்சியில் ஏறியவர்கள் 23 நபர்கள். இவர்களில் 8 நபர்கள் மதுரையிலும், 15 நபர்கள் திருநெல்வேலியிலும் இறங்கியுள்ளார்கள். திருநெல்வேலியில் இறங்கிய நபர்களை விசாரிக்க நமது டீமை அனுப்புங்கள். மதுரைக்கு நாம் இருவரும் உடனே கிளம்புகிறோம்.'

'எஸ் சார்.'

இரவு 10.16 :
திருச்சி 134 கி.மீ. என வழிகாட்டிய பைபாஸ்ரோட்டின் ஓரத்தில் உள்ள போர்டை பார்த்தபடி காருக்கு வேகம் கொடுத்தான் சதீஸ்.

'என்ன சதீஸ்! மதுரையில் ஒரு க்ளுகூட கிடைக்கவில்லை. திருநெல்வேலியின் நிலை என்ன?'

'அங்கும் அந்தளவுக்கு நம்பிக்கையான தகவல் இல்லை சார்.'

'திருச்சிக்கு போனால் அவரது சொந்த ஊர் மற்றும் மில்லில் ஏதாவது கிடைக்குமா?'

'கண்டிப்பாக சார். நம்மகிட்டேயிருந்து அவன் தப்பவே முடியாது.'

'பார்ப்போம்.' என கூறிவிட்டு ரிசர்வேஷன் சார்டை எடுத்து புரட்ட ஆரம்பித்தார். இவர்களை சுமந்தபடி பைபாஸில் கார் திருச்சி நோக்கி பறந்தது.
***

காவல்துறை ஆணையர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி. மாலை 4 மணி :
பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ராம்.

'எப்படி சார், கொலையாளியை கண்டுபிடிச்சீங்க?', 'அதுவும் கல்லூரி மாணவன்?.', 'ஒரே நாளில் எப்படி சார் சாத்தியமானது?.' என்று கேள்வி கணைகளை தொடுக்க‌ ஆரம்பித்த பத்திரிக்கையாளர்களை கையமர்த்திவிட்டு பேச ஆரம்பித்தார் ராம்.

"எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்கிறேன். எந்த கேஸிலும் க்ளு கிடைப்பதை பொறுத்துதான் கொலையாளி மாட்டுவான். இந்த கேஸை பொருத்தவரை ஒரே நாளில் முடிந்துவிட்டது. திருநெல்வேலி, மதுரையில் விசாரணையை முடித்துவிட்டு திருச்சிக்கு வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது ரிசர்வேஷ‌ன் சார்ட்டை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு 'ஐடியா' கிடைக்க இறந்த நபர் எங்கே ரிசர்வேஷ‌ன் செய்துள்ளார் என சார்ட்டை பார்க்க அது 'திருச்சி' என காட்டியது. இன்று காலை திருச்சியில் ரிசர்வேஷன் ஆபிஸ் சென்று நெல்லை எக்ஸ்பிரஸ்க்கு குறிப்பிட்ட தேதியில் 'யார் யார் ரிசர்வ் செய்துள்ளார்கள்?' என்ற பட்டியலை எடுத்தோம்.
மொத்தம் 18 நபர்கள். இவர்கள் திருச்சி டூ மதுரை, திருச்சி டூ திருநெல்வேலி என ரிசர்வ் செய்திருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் திண்டுக்கல் டூ விருதுநகர் என்று ரிசர்வ் செய்திருந்தார். அவர் ரிசர்வ் செய்ய கொடுத்த விண்ணப்பபடிவத்தில் அவரது பெயர் சிவா, வயது 21 என்றும் இருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்த போது அந்த முகவரி போலியானது என தெரியவர விசாரணையை தீவிர படுத்தினேன். அந்த டிக்கெட் ரிசர்வ் செய்யப்பட்ட‌ நேரத்தில், ரிசர்வ் செய்த கவுண்டரில் உள்ள கேமிராவில் பதிவான அந்த நபரின் புகைப்படத்தை வாக்காளர் அடையாள அட்டை பட்டியலோடு ஒப்பிடுகையில் உண்மையான முகவரி கிடைக்க சிக்கனான். விசாரணையில் முதலில் மறுத்தவன் பிறகு ஒப்புக்கொண்டான்.

அவனது பெயர் பாலா., வயது 21., எம்.காம். முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவன். இவருடன் படிக்கும் சக மாணவி சாந்தி. இவர் இறந்துபோன நபரின் ஒரே மகள். சாந்தி, "தன்னை ஒருதலை பட்சமாக காதலித்த பாலாவின் தொந்தரவு தாங்காமல் தன் தந்தையிடம் கூறி கண்டித்துள்ளார்."
"என் மகளை பின் தொடர்ந்தால் உன்னை கொன்றுவிடுவேன்." என்று கூறி அவரை கல்லூரி வளாகத்திலே அடித்து அவமானப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலா சாந்தியையும், அவரது தந்தையையும் கொல்ல திட்டம் தீட்டியுள்ளான்.

முதலில் சாந்தியின் தந்தை திருநெல்வேலி செல்வதை அறிந்த பாலா திட்டம் போட்டு, போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக திண்டுக்கல் டூ விருதுநகர் ரிசர்வ் செய்து, திருச்சியிலிருந்து அதிகாலையில் பஸ்ஸில் திண்டுக்கல் சென்று அங்கிருந்து இரயில் ஏறி, எல்லோரும் தூங்கும் நேரம் என்பதால் எளிதாக அவர் அருகே சென்று தான் கொண்டு வந்த துணியால் அவரது வாய் மற்றும் மூக்கை பொத்தி கொலை செய்துள்ளான். அவரும் குடிபோதை மயக்கத்தில் இருந்த‌து மேலும் இவனுக்கு எளிதாகியது. பின்னர் விருதுநகரில் இறங்கி உடனடியாக பஸ் பிடித்து திருச்சி வந்தடைந்து எப்பொழுதும் போல கல்லூரி சென்றுவிட்டான். அவன் செய்த தவறு, இற‌ந்துபோன நபர் ரிசர்வ் செய்த அதே ரிசர்வேஷன் சென்டரில் இவனும் ரிசர்வ் செய்ததுதான்." என்று கூறி முடிக்க ராமின் செல் அழைத்தது. எடுத்து பார்த்தான்.

அவனது மனைவி புன்னகைத்தாள்.

'சொல்லுமா!'

'ஸாரிங்க! நேற்று நீங்க வரலைன்னு கடுமையான கோபத்தில் உங்ககூட பேசாமலிருந்தேன். இப்பதான் டிவியில செய்தி பார்த்தேன். ரொம்ப சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கு. சீக்கிரம் வீட்டிற்கு வாங்க. ஸ்பெஷல் விருந்து உங்களுக்காக காத்திருக்கு.'

'சரிம்மா.' என்று செல்லை அணைத்துவிட்டு திரும்ப, அருகில் சதீஸ் புன்னகைத்தார்.

(உரையாடல் நடத்தும் சிறுகதைப்போட்டிக்காக)
.

18 comments:

சின்னப் பையன் said...

கதை நல்லாயிருக்கு அண்ணே!!!

//மெருகேறிய உடற்கட்டு, முறுக்கிய மீசை, பிடிப்பான யூனிபார்ம் என பார்க்க கம்பீரமாக தோன்றும் இன்ஸ்பெக்டர் ராம்//

இது நீங்கதானாஆஆஆஆ!!!

ஆ.சுதா said...

கதையை அருமையா கையாண்டு இருக்கீங்க ராம்... (இன்ஸ்பெக்டெர் ராம்!!!) கதை படிக்க நல்ல விரு விருப்பு. கொலையாளி தெரியும் வரை கதையோட்டம் மிக நேர்த்து. இடையில் கொலையாளியின் காரணத்தை விட்டு இருக்கலாம் என தோன்றுகிறது. முடிவு ரொம்ப சரி.

நல்ல கதை ராம்.

ஜானி வாக்கர் said...

கதை நல்லா இருக்கு ராம்.

நட்புடன் ஜமால் said...

டிடெக்டீவ் ஸ்டோரி

விருவிருப்பாக இருந்தது


வெற்றி அடைய வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

வாவ்வ்.. நல்ல விருவிப்பான கதை பாராடுகள் மற்றும் வெற்றிபெற வாழ்த்துகள் ராம் சார்

ச.பிரேம்குமார் said...

//மெருகேறிய உடற்கட்டு, முறுக்கிய மீசை, பிடிப்பான யூனிபார்ம் என பார்க்க கம்பீரமாக தோன்றும் இன்ஸ்பெக்டர் ராம்//
கிகிகி :) அது நீங்க தானா தல?

ச.பிரேம்குமார் said...

நேரம் கிடைத்தால் இன்னும் மெருகேற்ற முயலுங்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ராம் :)

வால்பையன் said...

தமிழுக்கு ஒரு செர்லாக் ஹோம்ஸ் வேணும்ல!

வாங்க வாங்க!

சொல்லரசன் said...

உங்க துறைசார்ந்த அனுபவத்துடன் அருமையான துப்பறியும் கதை,வெற்றிபெற வாழ்த்துகள் ராம்.

ராம்.CM said...

நன்றி ச்சின்னப்பையன்.!
நன்றி ஆ.முத்துராமலிங்கம் !
நன்றி ஜானி வாக்கர்!
நன்றி நட்புடன் ஜமால் !
நன்றி ஆ.ஞானசேகரன்!
நன்றி ச.பிரேம்குமார் !
நன்றி வால்பையன்!
நன்றி சொல்லரசன்!
நன்றி! நன்றி! நன்றி! என் கதைக்கு வாழ்த்துக்கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.!

sakthi said...

ச.பிரேம்குமார் said...

//மெருகேறிய உடற்கட்டு, முறுக்கிய மீசை, பிடிப்பான யூனிபார்ம் என பார்க்க கம்பீரமாக தோன்றும் இன்ஸ்பெக்டர் ராம்//
கிகிகி :) அது நீங்க தானா தல?

அப்படியா ராம் அண்ணா

sakthi said...

கதை நல்ல நடையில் அமைந்துள்ளது

வெற்றி போட்டியில் வெற்றி பெற

வாழ்த்துக்கள்

ராம்.CM said...

நன்றி சக்தி. வாழ்த்துக்கு நன்றி.!

Anonymous said...

ஒரு ராஜேஷ் குமார் கதையை படிச்ச மாதிரி இருந்தது. விருவிருப்பா யார் கொலையாலி என அறிந்து கொள்ளும் ஆர்வம் கதையை விட வேகமா மனசு ஒடுச்சு....ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு துப்பறியும் கதை படித்த நிறைவு.... வாழ்த்துகள் ராம்....

ராம்.CM said...

நன்றி தமிழரசி..

anujanya said...

விறுவிறுன்னு ஒரு துப்பறியும் கதை. உங்களுக்கு இது சாதரண விஷயமா இருக்கலாம். போலிஸ் துறை என்பதால் தகவல்கள் கச்சிதம். வாழ்த்துகள் ராம்.

அனுஜன்யா

ராம்.CM said...

நன்றி அனுஜன்யா! வருகைக்கும்,வாழ்த்துக்கும்.

S.A. நவாஸுதீன் said...

கதை விறுவிறுப்பாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களை அறிமுகம் செய்த தமிழரசிக்கு நன்றிகள்